Tuesday, 28 November 2017

ஜென்ம நட்சத்திர தோஷமும் பரிகாரங்களும்




அஸ்வினி:
முதற்பாகத்தில் பிறந்த குழந்தையின் தந்தைக்கு மூன்று மாதங்களுக்கு இன்னல்களும், பொருள் நஷ்டமும் உண்டாகும். அதற்கு சொர்ண தானமளிக்க வேண்டும். மற்ற மூன்று பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டு. இதற்கு வஸ்திர தானம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூத்தனூரில் எழுந்தருளியுள்ள கலைவாணியை வழிபட்டு வந்தால் எல்லா சிறப்புகளையும் பெறலாம்.

பரணி:
முதல் பாதம் தோஷமில்லை. இரண்டாவது பாதத்தில் பிறந்தால் தோஷமுண்டு. மூன்றாவது பாதம் மிகுந்த துன்பத்தை தரும். 4வது பாதம் முதல் 8 நாழிகைக்குள் பிறந்தால் தாயாரின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும். இதற்கு சாந்தியாகத் துர்க்கை அல்லது காளிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும். பொன் அல்லது எருமை தானமளிக்கலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பட்டீஸ்வரம் சென்று துர்க்கையை வழிபட்டால் வளம் பெருகும்.

கிருத்திகை:
முதலிரண்டு பாதங்கள் தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தால் பெற்றோர்களுக்கு இன்னல்களும் இடையூறுகளும் உண்டாகும். ஆடு தானம் சிறந்தது. சூரிய ஆராதனையும், திருவண்ணாமலையில் உள்ள அக்னி லிங்க வழிபாடுகளும் மன அமைதியையும், பொருள் வளமையையும் நல்கும்.

ரோகிணி:
முதற் பாகம் அக்குழந்தைக்கும், மற்றும் அதன் தாய் மாமனுக்கும், இரண்டாம் பாதம் அதன் தந்தைக்கும், மூன்றாம் பாதம் அதன் தாயாருக்கும் தோஷம் விளைவிக்கும். நான்காம் பாதம் சாதாரணமானது எனினும் நான்கு பாதங்களுக்கும் தோஷமுள்ளது, அத்துடன் தாய் மாமனுக்கும் கண்டம் என நூல்கள் விலக்குகின்றன. எனவே அவரவர்களின் சக்திக்கேற்ப சாந்தி ஹோமங்கள் செய்வதுடன், வெள்ளியைத் தானமளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் திருவருணை கோவிலில் பிரம்ம தீர்த்தம் எதிரில் உள்ள பிரம்ம லிங்கத்தை வழிபட்டு வந்தால் திரண்ட செல்வமும், நிறைந்த ஞானமும் பெறலாம்.

மிருகசீரிடம்:
நான்கு பாதங்களும் தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெளர்ணமி விரதமிருந்து சந்திரனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். திங்களூர் சென்று வழிபட்டால் தீராத குறைகளெல்லாம் தீரும்.

திருவாதிரை:
முதல் மூன்று பாதங்கள் தோஷமற்றது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாழிகை வரையில் தாயாருக்கு கண்டம். இதற்கு பசு நெய் தானமளித்திடல் வேண்டும். செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் விஷ்ணு ஸகஸ்ர நாமம், ருத்ர ஜபம் செய்துவந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

புனர்பூசம்:
நான்கு பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூரிய ஆராதனை செய்வது சாலச்சிறந்தது. திருவண்ணாமலையில் உள்ள சூரிய லிங்க ஆராதனை மிகவும் புகழையும், பொருளையும் வழங்கும்.

பூசம்:
முதற்பாதம் தாய்மாமனுக்கும், 2து பாதம் மத்திய (நடு) பாகம் மற்றும் மூன்றாம் பாதம் பெற்றோர்களுக்கும் துன்பம் உண்டாக்கும். நான்காம் பாதம் தோஷமற்றது. இரண்டாம் பாதமும், கடக லக்னமும் கூடிய ஆண்குழந்தை தந்தைக்கு கண்டத்தை உண்டாகும். இரவு நேரங்களில் பிறந்த பெண்குழந்தையால் தாயாருக்கு கெடுதி. இதற்கு பரிகாரமாக பசுவை தானம் செய்தல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தர்ஷினா மூர்த்தியையோ, ஹயக்ரீவரையோ வழிபட்டு வருவது சிறந்ததாகும்.

ஆயில்யம்:
முதற்பாகம் சாதாரணமானது. இரண்டாவது பாதம் அக்குழந்தைக்கும், அதன் தந்தைக்கும் தோஷம். மூன்றாவது பாதம் அதன் தாயாருக்குக் கெடுதி. நான்காம் பாதம் அக்குழந்தைக்கும் அதன் தந்தைக்கும் துன்பத்தை தரும். இதற்கு கிரக சாந்திகள், ஜபம், தானங்கள் அவசியம் செய்திடல் வேண்டும். நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தைக்கு ஆயுஷ் ஹோமம் செய்வதும், ஏழை எளயவர்களுக்கு வஸ்திரம் அன்னதானம் செய்வது மிகவும் அவசியம். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் சர்பேஸ்வரனை வணங்குவது நல்ல பலன்களை தரும். ஸ்ரீகாளகஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்வது சிறந்தது.

மகம்:
முதல்பாகம், குழந்தையின் தந்தைக்கு தன நஷ்டத்தை அக்குழந்தை பிறந்தது முதல் ஐந்து மாதம் வரை உண்டாக்கும். ஈஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனைகள், கிரக சாந்திகள், தானங்கள் செய்திடலாம். இரண்டு மற்றும் நான்காவது பாதம் சிறிதளவு தோஷம் உள்ளது. மூன்றாவது பாதத்தில் பிறந்த குழந்தை ஆண் ஆனால் தந்தைக்கும், பெண் என்றால் தாயாருக்கும் தோஷத்தை உண்டாக்கும். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் பித்ரு தேவதைகளை வழுவாது ஆராதனை செய்வது, திருக்கடையூர், ஸ்ரீவாஞ்சியம், திருமீச்சூர், திருப்பைஞ்சீலி ஆகிய திருத்தல வழிபாடுகளும் பெரும் நன்மையளிக்கும்.

பூரம்:
நான்கு பாதங்களும் சிறிதளவு தோஷமுள்ளது. இதற்கு பரிகாரமாக ருத்ராபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் அருணம் அல்லது மஹாஸரைம் பாராயணம் செய்வது மற்றும் ஆதித்ய ஹருத்யம் நாள்தோறும் படிப்பது, சூரியனை வழிபடுவது நன்மையாகும்.

உத்திரம்:
முதற்பாதம், முதலிரண்டு நாழிகைக்குள் பிறந்த குழந்தை ஆண் ஆயின் தந்தைக்கும், பெண் ஆயின் தாயாருக்கும் தோஷமுண்டாகும். இது இரண்டு மாதத்திற்குண்டு. இரண்டு மற்றும் மூன்றாம் பாதம் சாதாரணமானது. நான்காம் பாதம் தந்தையின் சகோதரர்களுக்கு தோஷமுண்டு பண்ணும், இதற்குப் பரிகாரமாக தைல (எண்ணெய்) தானம் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்களுக்கும் பன்னிரண்டு ஆதித்யர்தனைச் சேர்ந்த 'ஆர்ய மன்' என்னும் சூரியனை வழிபடல் வேண்டும்.

அஸ்தம்:
ஒன்று இரண்டு மற்றும் நான்காம் பாதம் தோஷமற்றது. மூன்றாம் பாதத்தில் முதல் நான்கு நாழிகைக்குள், ஆண் ஆனால் தந்தைக்கும், பெண் என்றால் தாய்க்கும் தோஷமுண்டு இது ஒன்பது மாதங்கள் நீடிக்கும். இத்தோஷத்தை ஸுவர்ணம் என்று கூறப்படும். பொன் தானத்தால் நீக்கிக்கொள்ள முடியும். ஆதித்ய ஹருதயம் பாராயணமும், சூரிய வழிபாடும் மேற்கொள்ள எல்லா நன்மைகளும் விளையும்.

சித்திரை:
முதல் மூன்று பாதங்கள் தாயாருக்கு, தந்தைக்கு மற்றும் சகோதரர்களுக்கு தோஷமுண்டாகும். இரண்டாவது பாதத்தில் முதல் ஆறு நாழிகைக்குள் எனின் குழந்தையின் தாய்க்கு மிகவும் தோஷம். முதலிரண்டு பாதங்களுக்குரிய கன்னி ராசியில் பகலில் பிறக்கும் ஆண் குழந்தை தந்தைக்கும், பெண் குழந்தை தாயாருக்கும் தோஷமுண்டாகும். இத பிறந்த ஆறுமாத காலத்திற்கு நீடிக்கும். நான்காம் பாதம் பிறந்த குழந்தை தந்தைக்கு துயரமும் உண்டாகும். வஸ்திர தானம் ஏற்ற பரிகாரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்திரனை வழிபடல் வேண்டும. திருவண்ணாமலையில் கிழக்கு திசையில் உள்ள அஷ்டலிங்கங்களில் முதல் லிங்கமான இந்திர லிங்க வழிபாடு, செல்வம், செல்வாக்கு, பதவி உயர்வு தரும்.

சுவாதி:
நான்கு பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாயு தேவனை வணங்குதல் நன்று. அருணையிலுள்ள வாயுலிங்க வழிபாடு சாலச்சிறந்தது. திருமகளையும் வணங்குவது ஏற்றது.

விசாகம்: நான்காம் பாதம் தோஷம். மற்ற பாதங்கள் தோஷமில்லை. நான்காம் பாதம் முதல் எட்டு நாழிகைக்குள் முதற் குழந்தையாக இருப்பின் தாயாருக்கு கண்டமென்றும் கூறப்படுகிறது. செவ்வாய்கிழமை, சஷ்டி, கிருத்திகை போன்ற சுப்பிரமணி சாமிக்குரிய நாட்களில் செந்நிற ஆடைச் சாற்றி சிவப்பு மலர்கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்வதும், துவரை மற்றும் கோதுமை தான்ய தானங்கள் செய்வதும் சிறப்பான பலன்களை தரும்.

அனுஷம்:
தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மித்ர என்னும் துவாதச ஆதித்யர்களில் ஒருவரான சூரியனை வழிபடல் வேண்டும். வருணனையும் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் வருணலிங்கத்தை வழிபடுவதும் மிகவும் சிறந்தது.

கேட்டை:
நான்கு பாதங்களும் தோஷத்தை தருவன. முதல் பாதத்தில் பிறந்தது. ஆண் குழந்தையாயின் மூத்த சகோதரனுக்கும், பெண் என்றால் மூத்த சகோதரிக்கும், 2ஆம் பாதம் மற்றமுள்ள சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும், 3ஆம் பாதம் அக்குழந்தையின் தாய்க்கும், செல்வத்திற்கும், 4ஆம் பாதம் அக்குழந்தை மற்றும் அதன் தாயாருக்கும் கண்டமாகும். பசு அல்லது தங்கத்தால் செய்த பசுவினை தானமளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 'தேவேந்திரனை' வழிபடல் வேண்டும். இந்த நட்சத்திர பெண்கள் திருமணத் தடை நீங்க தூய வெண்மையான மலர் கொண்டு தேவேந்திரனை மனதில் தியானித்து வழிபாடு செய்தால் நல்ல கணவர் அமைவார். அருணையிலுள்ள இந்திரலிங்கப் பூஜையும் மிகவும் சிறந்த பலன்களை தரும்.

மூலம்:
முதல் பாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் தந்தைக்கு துன்பம், பெண் குழந்தையாயின் கால்நடைகள் (பசுக்கள்) நஷ்டமாகும். 2ஆம் பாதம் ஆண் குழந்தையால் அதன் தாய்க்கு துன்பம். பெண்ணாயின் சுபம். 3ஆம் பாத ஆண் குழந்தையால் பெருள் நஷ்டம், சகோதரர்களுக்குத் துன்பம். 3ஆம் பாதம் பெண் குழந்தையினால் தந்தையின் வம்சத்திற்கே நஷ்டம். 3ஆம் பாதம் பகலில் பிறந்தால், அதன் தந்தைக்கும், மாலைப்பொழுது எனின் அக்குழந்தையின் தாய் மாமனுக்கும், இரவு எனின் அதன் தாய்க்கும் உதயவேளை அல்லது காலை எனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்குத் தீங்கு. இந்த நட்சத்திரத்தில் எப்பாதத்தில் பிறந்திருப்பினும், மஹன்யாஸத்துடன் கூடிய ருத்ராபிஷேகம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பிரஜாபதியை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெறுவார்கள்.

பூராடம்:
1, 2 மற்றும் 4ஆம் பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷம் உண்டு. மூன்றாம் பாதத்தில் புத்திரன் தந்தைக்கும், புத்ரியானால் தாய்க்கும் தோஷமாகும். இத்தோஷம் எட்டாம் மாதம் வரையில் இருக்கும். தனுசு ராசியில் உள்ள இந்த நட்சத்திரத்தில் சூரிய உதய வேளையிலும், அஸ்தமிக்கும் வேளையிலும், நடு இரவிலும் புத்ர ஜனனமானது அதன் தந்தைக்கும், மற்றும் அச்சிசுவிற்கும் பெரும் தோஷமாகும். நவக்கிரகம் மற்றும் நட்சத்திர ஹோமம் செய்வதும், புனித கங்கை நீரினால் சிவபெருமானுக்கு அபிஷேகமும் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தில் உதித்தோர். திருவானைக்காவல் இறைவனையும், திருவண்ணாமலையில் உள்ள வருணலிங்கத்தையும் வழிபட்டால் நல்ல செல்வமும், செல்வாக்கும் பெறலாம். பெளர்ணமி விரதம் ஏற்றது. தேங்காய், நெய் தீப வழிபாடு சாலச்சிறந்தது.

உத்திராடம்: நான்கு பாதங்களும் தோஷமில்லையாயினும், செவ்வாய்க்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் 'விஷ கன்னியா' யோக மேற்படும். அப்பெண் திருமணமாகி, கணவன் வீடு செல்லும் வரையில் பிறந்த வீட்டில் இன்னல்கள், இடையூறுகள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஸ்வதேவதைகளையும், விநாயகரையும் உள்ளன்புடன் வழிபட்டால் வாழ்க்கையில் வளம் பலம் பெறலாம். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர், திருப்பாதிரிப்புலியூர் பாதிரி விநாயகர், திருவண்ணாமலை ஆநிறை கணபதி ஆகியோரின் வழிபாடு மிக மிக உயர்ந்தது.

திருவோணம்:
தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் ஏகாதசி விரதம் இருந்து திருமாலை வழிபட்டாலும், சிரவண விரதமேற்கொண்டு திருவேங்கடமுடையானை ஆராதித்தாலும், லஷ்மி குபேர திருவுருவப் படத்தை - குபேர யந்திரம் - மந்திரம் கொண்டு பூஜித்தாலும், திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள குபேரலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்தாலும் பெரும் பொருளும், புகழும் பெறுவார்கள். வாகனப் பிராப்தியுண்டாகும்.

அவிட்டம்:
தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஷ்டஸுக்களை ஆராதிக்க வேண்டும். பித்துரு முக்தி ஸ்தலங்களில் இராமேஸ்வரம், காசி, கயை, லால்குடி அருகிலுள்ள பூவளூர் ஆகிய ஊர்களில் உள்ள இறைமூர்த்திகளை ஆராதனை செய்வதும் மிகுந்த நன்மை பயக்கும்.

சதயம்: தோஷமில்லாதது. இந்த நட்சத்திரத்தில் உதித்தோர் திருவானைக்காவல் இறைவனையோ, திருமீச்சூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமேக நாதரையோ, திருவருணையில் உள்ள வருணலிங்கத்தையோ வழிபட்டால் இன்னல்கள் எல்லாம் நீங்கி இன்பமுறுவர்.

பூரட்டாதி:
முதல் மூன்று பாதங்கள் சிறிதளவே தோஷமுள்ளது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாழிகைக்குள் பிறந்தால் சிசுவின் தாய்க்கு கண்டம். அதுவும் முதல் குழந்தை எனின் தோஷம் அதிகம். பொன் தானம் கொடுக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் செல்வத்தில் சிறந்தோங்க, லஷ்மி குபேர பூஜையை மேற்கொள்ள வேண்டும். திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள குபேரலிங்கத்தையும் சீர்காழி அருகிலுள்ள ஸ்ரீலஷ்மி புரீஸ்வரரையும் வழிபடுவது சாலச் சிறந்தது.

உத்திரட்டாதி:
தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர், காமதேனுவை பூஜித்தாலும், பட்டீஸ்வரத்திலுள்ள தேனுபுரீஸ்வரரை வழிப்பட்டாலும் நல்லவையெல்லாம் இடையூர் இன்றி வெற்றியுடன் நடைபெறும்.

ரேவதி:
முதல் மூன்று பாதத்தில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டாகும். நான்காம் பாதத்தில் பிறந்தால் குழந்தையின் தந்தைக்கும் தோஷமுண்டு. மூன்று மாதம் இருக்கும். இத்தோஷம் விலக பொன்னாலான பசு உருவம் மற்றும் பசும் நெய் தானமளித்திடல் வேண்டும். பன்னிரண்டு ஆதியர்களின் ஒருவரான 'பூஷா' என்பவரையோ, சூரியனார் கோவிலில் எழுந்தருளியுள்ள சூரிய நாராயணமூர்த்தியையோ அல்லது திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சூரிய லிங்கத்தையோ வழிபட்டாலும் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று சிறந்த முறையில் புகழுடன் வாழலாம்

Friday, 10 November 2017

உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி இருக்கு?




நவகிரகங்களில் சுக்கிரன் சுப கிரகம் ஆவார். களத்திரகாரகனான சுக்கிரன் வலுவாக இருந்தால்தான் இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும். வாழ்க்கையில் அனைத்து விதமான யோகங்களையும் அனுபவிக்கவேண்டும் என்றால், ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்று இருக்கவேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் எந்த ராசியில் இருந்தால், என்னென்ன பலன்களை வழங்குவார் என்பதைப் பார்ப்போம்.

மேஷம் :

மேஷ ராசியானது சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷபத்துக்கு 12-ம் இடமாகவும், துலாம் ராசிக்கு 7-ம் இடமாகவும் இருந்தால், இல்லற வாழ்க்கையில் சிறு பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்து மற்றவர்களை அதிகாரம் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.

ரிஷபம் :

ரிஷபம் சுக்கிரனின் ஆட்சி வீடு ஆகும். அன்பும் நல்ல பண்புகளும் கொண்ட வாழ்க்கைத்துணை அமைந்து, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். எந்த இடத்தில் இருந்தாலும் செல்வாக்குடன் திகழ்வர்.

மிதுனம் :

மிதுனத்தில் சுக்கிரன் இருந்தால், கலைகளில் ஆர்வம் உள்ளவராக இருப்பார்கள். செல்வமும், செல்வாக்கும் பெற்றுத் திகழ்வார்கள். இவர்கள் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவராகவும் இருப்பார்கள்.

கடகம் :

கடகத்தில் சுக்கிரன் இருந்தால் ஒரு செயலை ஈடுபாட்டுடன் செய்பவர்களாக இருப்பார்கள். இவருடைய நல்ல பண்புகள் பலராலும் பாராட்டப்படும்.

சிம்மம் :

சிம்மத்தில் சுக்கிரன் இருந்தால் வாழ்க்கைத்துணையால் சகல விதங்களிலும் நன்மை ஏற்படும். இவர்களுக்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும்.

கன்னி :

கன்னி சுக்கிரனின் நீச்ச வீடு என்பதால், சுக்கிரனால் எந்த ஒரு நன்மையும் ஜாதகருக்கு ஏற்படாது. குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். சுக்கிரன் நீச்சபங்கம் பெற்றிருந்தால் ஓரளவு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

துலாம் :

துலாம் சுக்கிரனின் ஆட்சி வீடாகும். சுக்கிரன் ஜாதகருக்கு அனைத்து விதமான சுகபோகங்களையும் தருவார். இந்த ஜாதகரால் வாழ்க்கைத் துணைக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

விருச்சிகம் :

சுக்கிரன் விருச்சிகத்தில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. இவர்களுடைய வாழ்க்கை எப்போதும் சண்டையும் சச்சரவுமாகவே அமையும். சுபகிரக பார்வை பெற்றிருந்தால் அசுப பலன்களின் தாக்கம் குறையும்.

தனுசு :

தனுசு ராசியில் சுக்கிரன் அமையப்பெற்றவர்கள் தலைமைப் பதவி வகிப்பவர்களாக இருப்பார்கள். கலை இலக்கியங்களில் படைப்பாளியாகவும் திகழ்வர். இவர்களுக்கு இல்லற வாழ்க்கையும் இனிமையாக அமையும்.

மகரம் :

மகரத்தில் சுக்கிரன் இருந்தால், ஜாதகருக்கு மனதிடம் அதிகரிக்கும். இவர்கள் இன்பம், துன்பம் எது வந்தாலும் சமமாக நினைத்து, கலக்கம் கொள்ளாமல் இருப்பார்கள்.

கும்பம் :

இது சனியின் வீடு என்பதால், அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கபடக்கூடும். இவர்களுடைய எண்ணங்கள் எதிர்மறையாகவே இருக்கும். விரைவில் உணர்ச்சிவசப்படும் இயல்பு கொண்டவர்கள்.

மீனம் :

மீனத்தில் உச்சம் பெற்று அமைந்திருக்கும் சுக்கிரன், ஜாதகருக்கும் அனைத்து விதமான நன்மைகளை தருவார். எல்லா வகைகளிலும் ஜாதகருக்கு நன்மைகளே ஏற்படும்.

Monday, 6 November 2017

கடவுளை வணங்கும் முறைகள்:


கடவுளை வணங்கும் முறைகள்:


மும்முர்த்திகளை வணங்கும்போது, தலைக்கு மேல் ஒரு அடி தூரம் உயர்த்திக் கும்பிட வேண்டும். மற்ற கடவுள்களுக்கு தலையின் மேல் கைகூப்பி வணங்க வேண்டும். 

குருவை வணங்கும்போது நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும். அரசர், அதிகாரி, தந்தை இவர்களை வணங்கும்போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். 

அந்தணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும். தாயை வணங்கும் போது வயிற்றில் கைகூப்பி வணங்க வேண்டும். தாய், தந்தை, குரு, தெய்வங் களுக்கு மட்டும் அஷ்டாங்க வணக்கம் செலுத்தலாம்.

நமஸ்காரம் என்பது பகவானுக்கும், பெரியோருக்கும் செய்யப்படும் மரியாதைக்கான காரியம். இதை மிகவும் வினயத்தோடும், பக்தி பூர்வமாகவும் செய்யச் சொல்லி இருக்கின்றனர். நமஸ்காரம் என்பதை எட்டு அங்கங்களும் பூமியில் படுகிற மாதிரி செய்ய வேண்டும்.

சிலர் சைக்கிளில் போகும்போதே கோவில் வாசலை பார்த்து, ஒற்றைக் கையால், “குட்மார்னிங்’ சொல்வது போல், கையை நெற்றியில் வைத்து விட்டுப் போவது உண்டு. இதெல்லாம் நமஸ்காரத்தில் சேர்த்தியே இல்லை.

ஸ்த்ரீகள், திருமாங்கல்யம் கீழே தரையில் படக்கூடாது என்பதற்காக மண்டியிட்டு நமஸ்காரம் செய்யச் சொல்லி இருக்கிறது.

பகவானை வணங்கும் போது விபூதி இட்டுக் கொள்வது முக்கியம்; மற்றொன்று, ருத்ராட்சம் அணிந்து கொள்வது. இதுவும் ரொம்ப விசேஷம். இது, பரமேஸ்வரனின் மூன்றாவது கண்ணாக சொல்லப்பட்டுள்ளது. ருத்ராட்சம் அணிந்தவரை எமதூதர்கள் அண்டமாட்டார்களாம்.

எமதூதர்கள் அண்டமாட்டார்கள் என்றால், எமதூதர்கள் கடைசி காலத்தில் கத்தி, கம்பு, தடி, ஈட்டியுடன் வரமாட்டார்கள்; திவ்ய தேகத்துடன் கூடிய பூத கணங்கள் வந்து அழைத்துச் செல்வராம்.

கடவுளை வணங்குவதை வெறும் சம்பிரதாயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏதோ கோவிலுக்கு போனோம். சாமியைக் கும்பிட்டோம் என்று கடமையாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை உள்ளது. கோவிலுக்குச் சென்று கும்பிடுவதில் அப்படி என்ன ஒழுங்குமுறை உள்ளது என்று பார்ப்போமா…?

* மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.

* அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

* கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

*மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

*வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே அணைவதே சிறந்தது. நாம் அதனை அணைக்கக் கூடாது.

*திருக்கோவிலின் பிரதான வாசல் வழியில் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

* விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.

* தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.

* கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.

பொருத்தம் என்றால் என்ன? ஏன் அவசியம் பார்க்க வேண்டும்?


பொருத்தம் என்றால் என்ன? ஏன் அவசியம் பார்க்க வேண்டும்?




திருமண பொருத்தம் :

🌿 ஒருவருக்கு வாழ்க்கையில் முக்கியமான மற்றும் திருப்பு முனையாக இருப்பது திருமண பந்தம் தான். திருமணம் என்பது மனப்பு+ர்மாக மணமகனையும், மணமகளையும் இணைப்பதாகும். சிறப்பான துணை யார் என்பதை அறிய திருமண பொருத்தங்கள் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டன. 

🌿 திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பனிரெண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. 

🌿 பொதுவாக நம் நாட்டில் திருமணம் செய்துகொள்ள போகின்ற ஆணின் ஜாதகத்தையும், பெண்ணின் ஜாதகத்தையும் வைத்து பொருத்தம் பார்த்த பின்பு, நம் பாரம்பரிய முறைப்படியான தசவிதப் பொருத்தங்கள் இருந்தால் திருமணம் நிச்சயம் செய்கிறோம்.

🌿 திருமண பொருத்தத்தில் மிக முக்கிய பொருத்தம் என்பது ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்று கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்.

திருமணப் பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்? 

🌿 ஜாதக பொருத்தம் என்பது பல காலமாக நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையான பழக்கம் ஆகும்.

🌿 மனிதனின் பிறப்பு ஜாதகம் அவனது குண நலன்களை கூறுகிறது. ஜாதகத்தை பார்த்து கூடுமானவரை ஒருவரைப் பற்றி கணிக்க இயலும். எனவே திருமணத்திற்கு முன்பு ஜாதகம் பார்ப்பது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. ஜாதகத்தில் குணநலன், வேலை, வசதி வாய்ப்புகள், ஆயுள், நோய், உடல் ஆரோக்கியம் என அனைத்தையும் ஓரளவு கணிக்க இயலும்.

🌿 பொருத்தம் பார்க்கும் விஷயத்திலும் பெண்ணுக்குத்தான் ஜோதிடத்தில் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய நட்சத்திரத்தைக் கொண்டுதான், ஆணுடைய நட்சத்திரத்தோடு அது பொருந்தி வருகிறதா என்று பார்ப்பர். எல்லா நட்சத்திரங்களும் எல்லோருக்கும் பொருந்தாது. அதற்குத்தான் திருமணபொருத்தம் பார்க்கப்படுகின்றது.

12 பொருத்தங்கள் :

✴ தினப் பொருத்தம் 

✴ கணப்பொருத்தம் 

✴ மகேந்திரப் பொருத்தம் 

✴ ஸ்திரீ தீர்க்கம் 

✴ யோனிப் பொருத்தம் 

✴ இராசிப் பொருத்தம் 

✴ இராசி அதிபதி பொருத்தம் 

✴ வசியப் பொருத்தம் 

✴ ரஜ்ஜிப்பொருத்தம் 

✴ வேதைப் பொருத்தம் 

✴ நாடிப் பொருத்தம் 

✴ விருட்சப் பொருத்தம் 

🌿 மேலே கொடுக்கப்பட்டுள்ள 12 பொருத்தங்களில் முதல் 10 பொருத்தங்களே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.





சித்தர்கள் மலையில் தவம் செய்ய என்ன காரணம் ?



சித்தர்கள் மலையில் தவம் செய்ய என்ன காரணம் ?



குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என வழிபடப்படுகிறது. 

புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாஸ்த தலமாக சொல்கிறது. அதே போல திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது. திருவண்ணாமலையும் அங்குள்ள மண்ணும் கல்லும் கூட சிவலிங்கமாக மதிக்கப்படுகிறது. 

ஒரு வைணவ பெரியவர் கால்களால் மிதிக்காமல் முழங்காலிட்டே திருமலை ஏறியுள்ளார். காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார். திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையை கால்களால் தீண்டுவது பெரும் பாவம் என அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வர் ஆலயத்திலிருந்தே அண்ணா மலையை தரிசித்துள்ளார். 

அன்னை ஆதிபராசக்திக்கு விந்தியா சல நிவாசினி என்று ஒரு பெயர் உள்ளது. அதன் பொருள் என்னவென்றால் விந்திய மலையில் வாசம் புரிபவள் என்பதாகும். உச்சி பிள்ளையாரும், ஐயப்பனும் மலையிலேயே இருக்கிறார்கள். 

பராம்பரியமான சந்நியாசகளின் ஒரு பிரிவினருக்கு கிரி என்ற மலை பெயரே சந்நியாச நாமமாக கொடுக்கப்படுகிறது. இவை எல்லாம் இந்து பராம்பயத்தில் மலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும். ஆகவே மலைகளுக்கும் ஆன்மீக உணர்விற்கும் மிக நெருக்கமான உறவு இருந்துவருகிறது.

அதற்கு காரணம் :

மலைகள் மனிதனால் அதிகமாக சஞ்சாரம் செய்யாத பகுதி ஆகும். மனித மனதிலிருந்து உற்பத்தியாகும் பல வகையான எண்ண அலைகள் மலை பகுதிகளில் குறைவாகவே இருக்கும். இதனால் தவம் புரிவதற்கும், தியானம் செய்வதற்கும் மலைகள் பேருதவி புரிகின்றன. இதனாலேயே கடவுள் அம்சமாக மலை கருதப்படுகிறது.

இதனாலேயே சித்தர்கள் மலையில் தவம் செய்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

Friday, 3 November 2017

முருங்கையின் மகத்துவம்..... குருவின் பதிவு...

முருங்கை 🌿🍃🌱☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.

அளவில் சிறிய🌿🌿🌿 குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில்🌳🌲 முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.🌿🍃🌱☘

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை🚰🚰🚰 சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.

ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் 🌲🌳வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை🍃🥗🌿 வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

முருங்கை மரத்தின் இலைகள்🌿, பூக்கள்🌸, காய்கள்🎋 என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

முருங்கைக்கீரையின்🍵 சாறு ரத்த அழுத்தத்தை💓 சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத்💔🖤💔🖤💗💗💗 தணிக்கவும் வல்லதாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப்🍃🌿🌱 போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்குத்👨‍👩‍👧‍👦👬🚶🏻 தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் 🥗உள்ளது.

மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ 🍤🍗🍖🍳உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.

அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.🍀🍃🌿☘🌱

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 🍃🌿🍃🌿1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

குழந்தையின்மைப்💔 பிரச்னைக்கு முருங்கைக்கீரை🌿 மட்டுமின்றி, முருங்கைப்பூவும்🌸 மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

முருங்கைக்கீரையில் தயிரில்🍶🍶 இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப்🍊🍊🍊 பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

வாழைப்பழத்தில்🍌🍌🍌 உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில்🥕🥕🥕🥕 உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் 🥛🥛🥛🥛உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.

மற்ற கீரைகளைப்🌿🍃 போல அல்லாமல் காய்ந்த முருங்கை🍂🍂🍂 இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

✨🌟✨🌟✨🌟✨🌟✨

Wednesday, 1 November 2017

பிரதோஷம் மற்றும் அதன் வழிபாடு பலன்...


இரவும் பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு `உஷத் காலம்’ என்று பெயர். உஷத் காலத்தை பகற்பொழுதின் முகம் என்று சொல்வார்கள். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா. அவளது பெயரிலேயே இது உஷத்காலம் என அழைக்கப்படுகிறது.

இதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேரம் `பிரத்யுஷத் காலம்’ எனப்படும். சூரியனின் இன்னொரு மனைவியாகிய பிரத்யுஷா இக்காலத்திற்கு அதி தேவதை என்பதால் அவள் பெயரால் இது அழைக்கப்பட்டு, இப்போது பேச்சு வழக்கில் “பிரதோஷ காலம்” என அழைக்கப்படுகிறது என்பார்கள்.

பிரதோஷ வேளையை “ரஜ்னிமுகவேளை” எனவும் கூறுவர். இதற்கு `இரவின் முகம்’ என்பது பொருள்.

இந்த பொழுது சாயும் நேரத்திற்கு அதிதேவதையான பிரத்யுஷாவிற்கு `சாயா’ என்ற பெயரும் உண்டு. இந்த வேளையில் பகல் முழுவதும் உழைத்துக் களைத்த உயிர்கள் அவளால் ரட்சிக்கப்படுகிற காலம் என்ற பொருள்பட இந்த நேரம் `சாயரட்சை’ எனவும் அழைக்கப்படுகிறது.

தோஷம் என்றால் குற்றமுடையது என்பது பொருள்; அதேநேரம், பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள்.

எனவே குற்றமற்ற இந்த பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.,

பிரதோஷ வழிபாடு பலன்

ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்

திங்கள் சோம பிரதோஷம் - நல் எண்ணம், நல் அருள் தரும்

செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்

புதன் பிரதோஷம் - நல்ல குழந்தை பாக்கியம் தரும்

வியாழன் பிரதோஷம் - திருமணத் தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.

வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்

சனிப் பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்.

தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்.