இறைவனை துதிக்கப் பயன்படுத்தும் ஜெப மாலையின் பயன்கள்
வழக்கமான மாலைகளான ருத்ராட்சம், துளசி உள்ளிட்டவை ஆன்மிக ரீதியில் பயன்படுத்தும் மாலைகள். இவை தவிர இன்னும் வெவ்வேறு ஜெப மாலை வகைகள் உள்ளன.
ஜெப மாலைகளைப் பயன் படுத்தி மந்திர ஜெபம் செய்வது, உலக அளவில் பரவலாக உள்ள வழக்கமாகும். ஜெபத்தின் போது, தெய்வம் மலர்ந்த கண்களுடனும், ஆசீர்வதிக்கும் கைகளுடனும் அருள் புரிவதாக மனதில் நினைப்பது ஆன்மீகத்தத்துவமாகும்.
ஜெபமாலை 108, 54 அல்லது 27 மணிகளால் அமைக்கப்படுகிறது. அவற்றில், புத்திரஜீவமணி மாலை, சங்கு மணி மாலை, பவள மணி மாலை, வைஜந்தி மாலை, ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலை, தாமரைமணி மாலை, முத்துமணி மாலை, நவரத்தின மற்றும் உபரத்தின மாலை, சந்தன மாலை, துளசிமணி மாலை, பொன் மணி மாலை, தர்ப்பை பவித்திர முடிச்சு மாலை என்று பல வகைகள் உள்ளன.
ஜெபமாலை பிறரது கண்களில் படுவது போல ஜெபம் செய்வதை தவிர்க்கவும், ஜெபத்தை தனியிடங்களில் செய்வதையும் சாஸ்திரங்கள் வலியுறுத்தியுள்ளன. கோவில், மலைப்பகுதி, கோசாலை, மரங்கள் சூழ்ந்த வனம், ஆற்றங்கரை மற்றும் கடற்கரை ஆகிய இடங்கள் அதற்கு உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
பஞ்சபூத மாலை :
இவ்வகை மாலைகள் பரவலான உபயோகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பு சந்தனம், தாமரை மணி, ருத்ராட்சம், ஸ்படிகம் மற்றும் துளசி ஆகிய மணிகளின் தொகுப்பாக உள்ள பஞ்சபூத மாலை, பஞ்சபூதங்களின் துணையைப் பெற உதவி செய்கிறது. மேலும் எதிர்மறை சக்திகளை விலக்க பயன்படுவதாகவும் நம்பப்படுகிறது. பொதுவாக, ஹோமம், யக்ஞம், பூஜை, கோவில் திருவிழா மற்றும் தெய்வ தரிசனம் போன்றவற்றில் ஈடுபடும் ஒரு சில ஆன்மிக சாதகர்கள், இவ்வகை மாலையை அணிவது வழக்கம்.இது ஆன்மிக முன்னேற்றத்துக்கு பயன்படுவதாக ஆன்மிக சாதகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
தாமரைமணி மாலை :
இனம், மொழி, மதம் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் இந்த மாலை உபயோகத்தில் உள்ளது. பொருளாதார முன்னேற்றத்தைத் தரவல்ல பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்றாக தாமரை மணியை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பணத்தை ஈர்க்கும் பல வகை பொருட்களில் தாமரை மணிக்கு முதலிடம் என்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது. மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் தாமரைப் பூவிலிருந்து கிடைக்கும் மணியாக இருப்பதால், லட்சுமி கடாட்சம் பெற்றது என்ற கருத்தும் உண்டு.
பவள மாலை :
பவளம் செவ்வாய்க்குரிய ரத்தினம் என்ற நிலையில், ஜாதக ரீதியாக செவ்வாயின் பாதிப்புகளை தடுக்கும் விதத்தில் ஜெப மாலையாக பயன்படுகிறது. பொதுவாக இவ்வகை மாலைகள் 54 என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கணபதி, முருகன், துர்க்கை மற்றும் அனுமன் ஆகிய தெய்வங்களின் மீதான ஜெபம் அல்லது பூஜை ஆகியவற்றில் இவ்வகை மாலைகள் பெரிதும் பயன்படுகின்றன.
புத்திர ஜீவ மாலை :
தமிழில் இருக்கொல்லி, கறிப்பாலை என்றும், சமஸ்கிருதத்தில் புத்திரஜீவ என்றும், ஆங்கிலத்தில் லக்கி பீன்ஸ் என்றும் இவ்வகை மரம் குறிப்பிடப்படுகிறது. அதன் பழங்களில் இருந்து பெறப்படும் விதைகள், 108 எண்ணிக்கை கொண்ட மாலையாக கோர்க்கப்பட்டு ஜெபம் செய்ய பயன் படுத்தப்படுகிறது. புத்திரஜீவ என்ற பெயருக்கு ஏற்றாற்போல் குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்யும் சக்தி படைத்ததாக இது இருக்கிறது. சூரியன் மற்றும் குரு ஆகிய கிரகங்களின் மந்திரம் அல்லது சந்தான கோபால கிருஷ்ண மந்திரம் ஆகியவற்றை இந்த மாலையைக்கொண்டு ஜெபமாக செய்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
வைஜந்தி மாலை :
வைஜந்தி (வைஜெயந்தி அல்ல) என்ற செடி வகையில் இருந்து கிடைக்கும் வெள்ளை நிற விதைகளை கோர்த்து ஜெப மாலை உருவாக்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணருடன் தொடர்புள்ள இடங்களான மதுரா, பிருந்தாவனம், கோகுலம் மற்றும் ஆக்ரா போன்ற இடங்களிலிருந்து கிடைக்கப்பெறும் வைஜந்தி மலர்களின் விதைகள் விசேஷமாக பயன்படுத்தப்படுகின்றன. வசீகர சக்தி மற்றும் இஷ்ட தேவதைகளின் தரிசனம் ஆகிய ஆன்மிக காரணங்களுக்காக இந்த மாலையை பயன்படுத்தி பலரும் நம்பிக்கையுடன் ஜெபம் செய்து வருகிறார்கள்.
ருத்ராட்சத்திற்கு அடுத்தபடியாக இயற்கையாகவே மத்தியில் துளைகள் கொண்டவை இந்தச் செடியின் விதைகள். கருப்பு நிறமுள்ள வைஜந்தி விதை மாலைகள் சனிக் கிரக பாதிப்புகளை தடுக்க உதவுவதாக சொல்லப்படுகிறது
மஞ்சள் விதை மாலை :
ஆன்மிக ரீதியாக மஞ்சள் கொண்டு உருவாக்கப்பட்ட ஜெப மாலைகள், தசமகா வித்யைகளில் ஒன்றான பகளாமுகி சாதனா முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
மன அமைதியை ஏற்படுத்துவதோடு, மனதின் அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி பெற்றவையாக மஞ்சளால் தயாரிக்கப்பட்ட மாலைகள் குறிப்பிடப்படுகின்றன.
குறிப்பாக, எதிரிகள் தொல்லை மற்றும் கடன்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது வழிபாட்டு முறைகளின்போது மஞ்சள் மாலையை அணிந்து கொண்டால் வெற்றி கிட்டுவதாகவும் நம்பிக்கை இருக்கிறது.
ஜாதக ரீதியாக குரு கிரகத்தின் நன்மைகளை பெறவும், போட்டிகள், வம்புவழக்குகள் போன்றவற்றில் வெற்றி பெற விரும்புபவர்கள், இந்த மாலையை அணிவது அவசியம் என்பதும் ஆன்மிக ரீதியான வழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஜெப மாலைகளில் , மேற்கண்ட மாலைகள் முற்றிலும் மாறுபட்டவை. இந்த மாலைகளை தக்க ஆலோசனைகளுக்கு பிறகு, பயன்படுத்துவது முக்கியம் என்பது கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment