Thursday, 26 October 2017

சண்டேசுவரர் வழிபாடு


சண்டேசுவரர் வழிபாடு


சிவனை தரிசிக்க சிவலாயத்திற்கு போகும்போது,அங்கே கருவறை வலம் வரும் போது ,அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் சண்டிகேசுவரர் எழுந்தருளி இருப்பார்.

சண்டேசுவரரை சண்டிகேசுவரர் என்று நாம் கூறுகிறோம்.இவர் சிவபெருமான் பக்தர் .இறைவன் திருவருள் பெற்ற அடியார் .எப்போதும் தியானத்திலேயே இருப்பவர்.

இவர் மண்ணையாற்றின் தென்கரையில் சேய்ஞலூர் எனும் சிற்றூரில் அந்தணர் வீட்டில் எச்சதத்தன் ,பவித்திரை என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார்,இவர் பெயர் விசாரசருமர்.

மாடுகள் மேய்ப்பதை விட்டுவிட்டு ,மண்ணால் சிவலிங்கம் செய்து ,அதற்க்கு பூஜை செய்து வந்தார் .பசுக்கள் சொரிந்த பாலை லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார் விசாரசருமர் .

இதையறிந்த தந்தை ,அவரை கோலால் அடித்தார்.ஆனால் அவர் தொடர்ந்து சிவபூஜையில் ஈடுபட்டார் .இதனால் கோபம் அதிகமாகி ,அபிஷேக பால் குடத்தை எட்டி உதைத்து சிவலிங்கத்தை சிதைத்தார் அவருடைய தந்தை .சிவ பக்தியால் கீழே கிடந்த கோலை எடுத்தார் , அது மழுவாக மாறியது . அதை கொண்டு தன் தந்தையின் இரு கால்களையும் வெட்டினார் விசாரசருமர்.

அப்போது சிவபெருமான் காட்சி தந்து இனி நாமே உமக்கு தந்தை எனக்கூறி ,திருதொண்டர்களுக்கு அவரை தலைவராக்கினார்.தன் சிரசில் கிடந்த கொன்றை மாலையை அவருக்கு சூட்டி ,இனி உன் பெயர் சண்டேசுவரர்என்று அனைவரும் அழைப்பர் .

என்றென்றும் என் அருகில் இரு என்று அருள்மழை பொழிந்தார் நம் அய்யன் சிவபெருமான்.

சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள் எல்லாம் சண்டிகேசுவரர் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன .

நாம் எல்லோரும் சிவன் சொத்து குல நாசம் என்று கூறுவதை கேள்விப்பட்டிருப்போம்.எந்தவொரு பொருளையும் சிவன் ஆலயத்திலிருந்து வீட்டிற்கு எடுத்து செல்லக் கூடாது .மூலவரை தரிசித்து விட்டு ,இறுதியாக இவர் சந்நிதிக்கு வந்து வழிபடவேண்டும் .

இவர் முன் சிலர் தங்கள் ஆடைகளில் உள்ள நூலை எடுத்து போடுவதை காணலாம் .இது அறியாமையால் ,மற்றவர்கள் செய்வதை பார்த்து ,சிலர் செய்கிறார்கள் .இது தவறான ஒன்று .

சண்டேசுவரர் சந்நதியில் சென்று அவர் முன் மூன்று முறை கைகளால் மெதுவாக தாளமிட்டு சிவதரிசன பலனை தருமாறு கைகூப்பி வணங்கிய பின்னரே கோவிலில் இருந்து வெளியே வரவேண்டும்.அவரை முழுவலமாக சுற்றக்கூடாது.

சிவன் கோவில்களுக்கு செல்லும் போது மூலவரை தரிசித்த பின்னர் வலமாக வந்து சண்டேசுவரரை தரிசித்தால் தான் சிவ தரிசன பலன் பூர்த்தியாகும்.

இவர் சிவபெருமானை நினைத்து தியானத்தில் இருப்பவர் என்பதால் அவரை வணங்கும் போது நம் இரு கைகளையும் துடைத்து விட்டு, இங்கிருந்து நான் எதையும் கொண்டு செல்லவில்லை என்று வணங்க வேண்டும்.எல்லா வளமும் எல்லோருக்கும் கிடைக்கும் 

நாம் சிவபெருமானை வணங்கி சென்றதை கணக்கு வைத்து கொண்டு ,சிவபெருமானிடம் நம் பிராத்தனைகளை இவர் சேர்ப்பார் என்பது ஒரு நம்பிக்கை

No comments:

Post a Comment