Saturday, 28 October 2017

வீரம் காக்கும் கடவுள் வீரபத்திரர் ....



வீரம் காக்கும் கடவுள் வீரபத்திரர் 
வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தட்சண் சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்தினான். 

நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்காமல் பேசவே தாட்சாயணி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைய, ருத்திர தாண்டவடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகியதென்றும், கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர், முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார் என்றும் ஈற்றில் தக்கனின் சிரசை தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனவும் புராணங்கள் கூறும்.

சதி என்கிற தாட்சாயினி தட்சனின் இளைய மகளாவாள். சிவன் மீது கொண்ட காதலால், தவமிருந்து சிவனின் அன்பை பெறுகிறாள். இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்துநின்ற வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன் மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார். 

இதனை அறிந்த சதி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன் தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள். இதனால் சிவபெருமான் ருத்திரன், மகாகாளி, வீரபத்திரன் முதலிய அவதாரங்களை உருவாக்கி தட்சனை அழித்தார்.

வீரபத்திரருக்கு “வீரம் காக்கும் கடவுள்”என்று பொருள் என்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார். 

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, சென்னையிலுள்ள மயிலாப்பூர், தாராசுரம், கும்பகோணம், திருக்கடவூர் போன்ற இடங்களிலும், இலங்கை யாழ்ப்பாணத்தில் கோப்பாய், கல்வியங்காடு, வியாபாரிமூலை, தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வரகால்பட்டு ஆகிய இடங்களிலும் வீரபத்திரர் கோயில்கள் உள்ளன.

சென்னை - திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோயில் எனும் ஊர் உள்ளது . இவ்வூரின் தென் கிழக்கே அமைந்துள்ள அனுமந்தபுரம் ஆலயம் வீரபத்திரருக்கான சிறப்பு ஆலயமாக கருதப்படுகிறது .கிட்டத் தட்ட எட்டு அடி உயரம் கொண்ட கம்பீரமான உருவத்துடன் , மேற்கரங்களில் வில்லும் , அம்பும் , கீழ்க் கரங்களில் கத்தி , கேடயத்தையும் தாங்கியவராக எழுந்தருளியுள்ளார்.

இவரைச் சுற்றி அமைந்துள்ள கல்திருவாசியில் வலது கால் புறத்தில் தட்சன் நின்றிருக்க ,வீரபத்திரரின் தலையில் சிவலிங்கம் அமைந்துள்ளது ! வீரபத்திரர் எழுந்தருளிய வரலாற்றை பார்ப்போம்.

தட்ச சம்ஹாரத்திற்குப் பின் , வீரபத்திரரும் , பத்ரகாளியும் தமது கணங்களுடன் பெருமானை வணங்க பெருமான் அவர்களை தென்னகம் சென்று குடியேறும்படி அனுக்ரஹிக்க அதன் படி அவர்கள் விண் வழியே சென்று கொண்டிருந்த போது,வெற்றிலைத் தோட்டத்தின் நடுவே அமைந்துள்ள இந்த இடம் அவர்களுக்குப் பிடித்துப் போகவே .இங்கு தங்கினர் .

தட்ச யாகத்தில் உயிரிழந்து பேய்களான மனிதர்களும் , தேவர்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்தனர் . வீரபத்திரர் இங்கு சிவ பூஜை செய்து அவர்களுக்கு விபூதி அளிக்க அவர்களின் பேய் வடிவம் ஒழிந்தது !மனம் மகிழ்ந்த அவர்கள் அவரை வணங்கி ,

'' சிவ குமாரனே எங்கள் மனக்கலக்கம் அழிந்ததுடன் பேய் வடிவமும் தொலைந்தது போல் உம்மை வழிபடும் அன்பர்களுக்கும் நடை பெற வேண்டும் '' என்று வேண்டினர் . அதன் படி இன்றளவும் ஒவ்வொரு அமாவாசையன்றும் திரள் திரளாக மக்கள் வந்து வழிபாடு செய்கிறார்கள் ,குறிப்பாக மன நலம் குன்றியோர் , மற்றும் பில்லி, சூன்யம் , ஏவல் இவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து இவரை வழிபட்டு குறை நீங்கப் பெறுகிறார்கள் என்பது ஐதீகம்.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வீரபத்திரரை வணங்கி அருள் பெறலாம்.

அரன் மைந்தனாகிய வீரபத்திரர் வீற்றிருப்பதால் இத்தலம் அரன்மைந்தபுரம் என்றழைக்கப்பட்டு , பின் மருவி .அனுமந்தபுரம் ஆனதென்பர் .இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் வீரபத்திரருக்கு ஒரு விசேஷ அம்சம் உண்டு .அதாவது , இம் மூர்த்தி தன்னை உள்ளன்புடன் வழிபடுவோர்க்கு,

காலை வேளையில் குழந்தைப் பொலிவுடனும் ,உச்சி வேளையில் வாலிபத்தோற்றத்துடனும் ,மாலை வேளையில் வயோதிகததோற்றத்துடனும் காட்சியளிக்கிறார் !!

அதிலும் வெள்ளிக் கவசத்துடன் காணும் போது மனம் குளிர்கிறது .இக்கோயிலில் நான்குகால பூஜை சிவாச்சாரியாரால் நடத்தப் படுகிறது .

மகா சிவராத்திரியில் பெரிய இடப வாகனத்தில் வீரபத்திரர் வீதியுலா வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும் . இவருக்கு வெற்றிலைப் படல் சாற்றுவது மிக விசேஷமான பிரார்த்தனையாகக் கருதப் படுகிறது . வெற்றியைக் குறிக்கும் இலையே வெற்றிலையாகும் வெற்றிலைபடல் என்பது , சுவாமியைச் சுற்றி அதற்கென உள்ள பிரபையில் வெற்றிலைகளை பொருத்தி அமைக்கின்றனர் . அரை வெற்றிலைப் படலுக்கு,6400 வெற்றிலைகளும் , முழுப்படலுக்கு 12800 வெற்றிலைகளும் பயன் படுத்தப் படுகின்றன . மேலும் வெண்ணைக்காப்பும் இங்கு சிறந்த பிரார்த்தனையாகும் .

வீரபத்திரரின் வழிவந்தவர்கள் மற்றும் அவரை குல தெய்வமாக வழிபடுபவர்கள் வீரமுஷ்ட்டி அல்லது வீரமுட்டி என்று அழைக்கபடுவார்கள். வீரமுட்டிகள் தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பரவலாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் .வீரபத்திரசுவாமி வண்ணார்களின் குலதெய்வமாக வணங்கப்படுகிறது

No comments:

Post a Comment